பொன்பரப்பி,பொன்னமராவதி சம்பவங்கள் வேதனை அளிக்கிறது:முதல்வர், துணை முதல்வர்

பொன்பரப்பி மற்றும் பொன்னமராவதி ஆகிய கிராமங்களில் நிகழ்ந்திருக்கும் சம்பவங்கள் வேதனை அளிப்பதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

கூட்டாக வெளியிட்டிருக்கும் அறிக்கையில், பொன்பரப்பி கிராமத்தில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட பிரச்சனையிலும், பொன்னமராவதியில் ஏற்பட்ட இரு சமூகத்தினரிடையேயான பிரச்சனையிலும் மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் உடனடியாக தலையிட்டு அங்கு சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.

சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் விதமாக ஏற்பட்ட இந்த இரு சம்பவங்களும் வேதனைக்குரிய ஒன்று என தெரிவித்திருக்கும் அவர்கள், அதிகாரிகள் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இச்சம்பவங்களுக்கு காரணமான அனைவர் மீதும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதில் அதிமுக உறுதியாக இருப்பதாகவும் கூட்டாக விடுத்திருக்கும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

Exit mobile version