”பொங்கல் தொகுப்பு முறைகேடுகள்” – வெள்ளை அறிக்கை வெளியிட வலியுறுத்தல்

பொங்கல் தொகுப்பில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று திமுக அரசுக்கு, அண்ணா திமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட பொங்கல் தொகுப்பில் உள்ள பொருட்கள் தரமற்றதாகவும், எடை குறைவாகவும் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

பெரும்பாலான இடங்களில் வழங்கப்பட்ட தரமற்ற பொருட்கள் குறித்து பொதுமக்கள் புகார் அளித்தும், திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதிமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட பொருட்களின் விலையை விட குறைவான விலையிலேயே பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களை வாங்கியதாக அமைச்சர் கூறியதை சுட்டிக்காட்டியுள்ள, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இதன் மூலம் மட்டமான பொருட்களை வழங்கி மக்களை ஏமாற்றியது தெளிவாக தெரிகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு நிறுவனம் ஒரு பொருளை 5 அல்லது 19 ரூபாய் குறைத்துக் கொடுக்க ஒப்புக் கொள்ளலாம். ஆனால் 42 ரூபாய் குறைத்து கொடுக்க ஒப்புக்கொள்கிறது என்றால் அதனுடைய தரம் எப்படி இருக்கும், எடை எந்த அளவிற்கு இருக்கும் என்பதை தெரிந்தும் திமுக அரசு வாங்கியது நோக்கம் என்ன..? என்றும்,

எடைக்குறைவு, தரமற்ற பொருட்களை வழங்கி ஆயிரத்து 250 கோடி ரூபாயை திமுகஅரசு வீண்டித்து விட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். எனவே, பொங்கல் தொகுப்பு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

Exit mobile version