மார்ச் 10ம் தேதி தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும்

உலக வங்கி மூலம் தமிழக சுகாதாரத்துறைக்கு 2 ஆயிரத்து 645 கோடி ரூபாய் கிடைக்கும் வகையில், ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, ஸ்டான்லி மருத்துவமனை, கை மற்றும் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சைத்துறை இணைந்து நடத்தும் நேரலை பயிலரங்கம் மற்றும் தொடர் மருத்துவக்கல்வி நிகழ்ச்சியின் தொடக்க விழா சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் நடைபெற்றது.

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு காலணிகளை வழங்கிய அமைச்சர் விஜயபாஸ்கர், நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வு பிரசுரத்தையும் வெளியிட்டார். இதையடுத்து விழாவில் பேசிய அவர், போலியோ சொட்டு மருந்து மார்ச் 10ம் தேதி தமிழகத்தில் வழங்கப்படும் என்று தெரிவித்தார். உலக வங்கி மூலம் தமிழக சுகாதாரத்துறைக்கு 2 ஆயிரத்து 645 கோடி ரூபாய் கிடைக்கும் வகையில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் அவர் கூறினார்.

Exit mobile version