பிரதமர் மோடி சிறந்த வழிகாட்டும் ஆசிரியராக உள்ளார்; அரசு பள்ளி மாணவி பெருமிதம்

பிரதமர் மோடி சிறந்த வழிகாட்டும் ஆசிரியராக மாணவர்களுடன் சகஜமாக கலந்துரையாடியதாக திருவாரூர் அரசு பள்ளி மாணவி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

பொதுத்தேர்வு எழுதுவதில் மாணவர்களுக்கு நிலவும் அச்சத்தை போக்கும் வகையில், ”தேர்வுக்கு பயம் ஏன்?” என்ற நிகழ்ச்சி டெல்லியில் கடந்த 20ம் தேதி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி மாணவர்களுடன் கலந்துரையாடினார். இந்நிகழ்ச்சியில் தமிழகத்தை சேர்ந்த 64 மாணவர்கள் உட்பட நாடு முழுவதும் 2 ஆயிரத்து நானூறு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். தமிழகத்தில் இருந்து கலந்து கொண்ட 64 மாணவர்களில் அரசுபள்ளியில் இருந்து கலந்து கொண்ட ஒரே மாணவி என்ற பெருமை திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் ஆராதனா என்ற மாணவிக்கு கிடைத்துள்ளது. பிரதமர் மோடியுடனான நிகழ்ச்சி குறித்து பேசிய மாணவி ஆராதனா, பிரதமர் மோடி ஒரு சிறந்த ஆசிரியராக அங்கிருந்த மாணவர்களுக்கு வழிகாட்டியதாகவும், தங்களுடன் சகஜமாக பேசி கலந்துரையாடியதாகவும் கூறியுள்ளார். மேலும் இந்நிகழ்ச்சி தனக்கு பயனுள்ளதாக இருந்ததாகவும் மாணவி தெரிவித்தார்.
 

Exit mobile version