கும்பமேளாவில் தாக்குதல் நிகழ்த்த திட்டமிட்ட ஐ.எஸ். தீவிரவாதிகள் கைது

கும்பமேளாவில் பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தவும், கலவரத்தை ஏற்படுத்தவும் திட்டமிட்டு இருந்த ஐ.எஸ். தீவிரவாதிகள் 9 பேரை தீவிரவாத தடுப்பு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கும்பமேளா நடைபெற்று வருகிறது. தினந்தோறும் வெளிநாட்டினர் உள்ளிட்ட லட்சக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு புனித நீராடி வருகின்றனர். பக்தர்களை குறிவைத்து ரசாயன ஆயுத தாக்குதல் நடத்தவும், உணவு மற்றும் குடிநீரில் விஷம் கலக்கவும் ஐ.எஸ். தீவிரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாக தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து, தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட சிறப்பு அதிரடிப் படையினர், மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாத்தில் 9 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஹைட்ரஜன் பெராக்சைட் என்ற ரசாயன பாட்டில் பறிமுதல் செய்யப்பட்டது. ரசாயன பவுடர்கள், கத்திகள், மொபைல்கள், லேப்டாப்கள் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவர்களில் மசார் மல்பாரி என்பவன், தாவூத்தின் கூட்டாளி என்பது தெரிய வந்துள்ளது.

ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி மக்களை கொன்று குவிக்க ஐ.எஸ். தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டி இருந்தது முறியடிக்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Exit mobile version