குவைத்தில் வெளிநாட்டவர்களை வெளியேற்ற திட்டம் ; தாயகம் திரும்பும் 8 லட்சம் இந்தியர்கள்?

குவைத்தில் அதிகளவில் வசிக்கும் வெளிநாட்டவர்களை வெளியேற்றும் வரைவு மசோதாவுக்கு அந்நாட்டின் தேசிய சட்டமன்றக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் சுமார் 8 லட்சம் இந்தியர்கள் தாயகம் திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது. எண்ணெய் வளமிக்க வளைகுடா நாடான குவைத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு, எண்ணெய் விலை குறைவு ஆகியவற்றால் பொருளாதாரம் ஆட்டம் கண்டுள்ளது. இதனால் அங்கு வேலைவாய்ப்பும் கணிசமாக குறைய தொடங்கியுள்ளது. இந்நிலையில், குவைத்தில் வசிக்கும் வெளிநாட்டவர்களை அங்கிருந்து வெளியேற்ற அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான வரைவு மசோதாவுக்கும் தேசிய சட்டமன்றக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. குவைத்தில் தற்போது 43 லட்சம் பேர் வசித்து வரும் நிலையில், இதில் 13 லட்சம் பேர் மட்டுமே அந்நாட்டை பூர்வீகமாக கொண்டவர்கள். (NEXT) எஞ்சிய 30 லட்சம் பேர் வெளிநாட்டவர்கள் ஆவர். பொருளாதாரத்தில் கடும் மந்தநிலை ஏற்பட்டுள்ளதால், வெளிநாட்டவர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என பரவலாக கோரிக்கை எழுந்துள்ளது. அதன் அடிப்படையில்தான் இந்த வரைவு மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. (NEXT) இம்மசோதாவின்படி, குவைத்தில் 15 சதவீத இந்தியர்கள் மட்டுமே இனி வசிக்க முடியும். அந்த வகையில் பார்க்கும் போது, சுமார் 8 லட்சம் இந்தியர்கள், தாயகம் திரும்ப வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

குவைத் நாட்டில் 5 லட்சத்து 23 ஆயிரம் இந்தியர்கள் தொழிற்சாலைகளில் பணியாற்றி வருவதாகவும், 28 ஆயிரம் இந்தியர்கள் அரசுத்துறைகளில் பணியாற்றி வருகின்றனர் என்றும் அங்குள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. மேலும், 23 இந்திய பள்ளிகளில் 60 ஆயிரம் மாணவர்கள் படித்து வருவதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே, வெளிநாட்டவர்களை வெளியேற்ற ஒப்புதல் அளிக்கும் வரைவு மசோதா, பிற சட்ட அமைப்புகளின் ஒப்புதலுக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் மார்சக் அல் கானீம் தெரிவித்துள்ளார். குவைத் அரசின் இந்த அதிரடி முடிவால் அங்கு வசிக்கும் இந்தியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

Exit mobile version