திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயில் கொள்ளை சம்பவத்தில் கொள்ளையன் கைது

திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயிலில் 3 தங்க கிரீடங்கள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.  ஆந்திர மாநிலம்  திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலில் பிப்ரவரி மாதம் 2ம்தேதி ஒரு வாலிபர் மூன்று தங்க கிரீடங்கள் திருடிச் சென்றதாக தேவஸ்தான அதிகாரிகள் காவல்துறையினருக்கு புகார் அளித்தனர். இதையடுத்து, கோயிலில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்த போலீசார்  தனிப்படை அமைத்து கொள்ளையனை தேடி வந்தனர். இந்த நிலையில், கொள்ளையடிக்கப்பட்ட 3 கிரீடங்கள் மும்பையில் விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்தது.   

இந்த தகவலை வைத்து சந்தேகத்தின் பேரில் நேற்று மாலை மும்பையில் உள்ள தாதர் ரயில் நிலையப் பகுதியில் சுற்றித் திரிந்த  ஆகாஷ் பிரதாப் என்பவரை பிடித்து விசாரணை செய்ததில் தங்க கிரீடங்களை கொள்ளையடித்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கொள்ளையன் ஆகாஷ் பிரதாப்பை கைது செய்த போலீசார், கொள்ளையடிக்கப்பட்ட தங்க கிரீடத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Exit mobile version