திமுக எம்.பி வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு : தேர்தல் ஆணையம் பதில் அளிக்க உத்தரவு

சேலம் மக்களவைத் தொகுதியில் திமுக எம்.பி.யின் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்க தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் சேலம் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் பார்த்திபன் வெற்றி பெற்றார். தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட பிரவீணா, சேலம் எம்.பி பார்த்திபன் வெற்றியை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்தார்.

அதில், வேட்பு மனுவுடன் தாக்கல் செய்த படிவம் 26ல் வேட்பாளர்கள், குற்ற விவரங்கள், சொத்து உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்த விவரங்களை முறையாக சமர்ப்பிக்காத பார்த்திபனின் வேட்பு மனுவை தேர்தல் அதிகாரி ஏற்றுக் கொண்டது சட்டவிரோதமானது என்று குறிப்பிட்டுள்ளார்.

பார்த்திபன் வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் மீண்டும் சேலம் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா, மனுவுக்கு இந்திய தேர்தல் ஆணையம், சேலம் தொகுதி எம்.பி பார்த்திபன் ஆகியோர் பதில் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 20 ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Exit mobile version