மக்கள் பணத்தைக் கொள்ளையடித்தவர்களுக்கு நிச்சயம் சிறை: பிரதமர் மோடி

மக்கள் பணத்தைக் கொள்ளையடித்தவர்கள் யாராக இருந்தாலும் நிச்சயம் சிறைக்குச் செல்வார்கள் எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் பார்லியில், சட்டமன்றத் தேர்தலையொட்டி பிரதமர் மோடி பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய பிரதமர் மோடி, மக்கள் பணத்தைக் கொள்ளையடித்தவர்கள் யாராக இருந்தாலும், எந்தவித தயக்கமின்றி அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுச் சிறையில் அடைக்கப்படுவார்கள் எனத் தெரிவித்தார். காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு அவசர முடிவை எடுத்திருப்பதாகவும், அதனால் காஷ்மீர் நம்மை விட்டுச் சென்றுவிடும் என காங்கிரஸ் தலைவர்கள் கூறி வரும் கருத்திற்கு மோடி கண்டனம் தெரிவித்தார். காஷ்மீர் விவகாரத்தில் முடிவு எட்டி 3 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், காஷ்மீர் நம்மை விட்டுச் சென்றுவிட்டதா? எனப் பிரதமர் மோடி காங்கிரஸ் தலைவர்களுக்கு கேள்வி எழுப்பினார். காஷ்மீரில் தற்போது நிலவும் சூழலில், யார் வேண்டுமானாலும் அமைதியாகச் சென்று வர முடியும் என அவர் உறுதியளித்தார்.

Exit mobile version