மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த முயன்ற மேலாளரை தாக்கிய நபர்கள்

வேலூர் மாவட்டம் ஆம்பூரில் தனியார் நிலத்தில் மணல் கொள்ளையில் ஈடுபட்ட நபர்கள், தடுத்து நிறுத்த முயன்ற மேலாளரையும் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆம்பூரை அடுத்த சான்றோகுப்பம் பாலாற்றங்கரையில் அமைந்துள்ள தனியாருக்கு சொந்தமான இடத்தில், மாட்டு வண்டிகளில் மணல் திருடப்படுவதாக அந்த நிலத்தின் மேலாளருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதிக்கு சென்ற மேலாளரிடம், மணல் திருட்டில் ஈடுபட்டிருந்த சாமு மற்றும் செந்தில் ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றவே செந்தில் மண்வெட்டியால் மேலாளரைத் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த மேலாளர், ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர், தலைமறைவாகியுள்ள சாமு, செந்தில் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.

Exit mobile version