காங்கிரஸ் வேட்பாளருக்கு மக்கள் மரண அடி கொடுக்க வேண்டும்-முதல்வர்

நாங்குநேரி தொகுதியில் இடைத்தேர்தல் வர காரணமாக இருந்த காங்கிரசுக்கு மக்கள் மரண அடி கொடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் வெ. நாராயணனை ஆதரித்து 2வது நாளாக நேற்று, அவர் பிரசாரம் மேற்கொண்டார். ஏர்வாடி பகுதியில் திரண்டு இருந்த பொதுமக்களிடையே உரையாற்றிய முதலமைச்சர், நாங்குநேரி இடைத்தேர்தல் வருவதற்கு காங்கிரஸ் வேட்பாளரின் சுயநலமே காரணம் என குற்றம்சாட்டினார். இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் மரண அடி கொடுக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டார். அதிமுக வேட்பாளரும், மண்ணின் மைந்தனுமாகிய நாராயணனுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தால் பல நன்மைகள் கிடைக்கும் எனவும் அவர் உறுதியளித்தார்.

இதையடுத்து, திருக்குறுங்குடியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட முதலமைச்சர், அதிமுக ஆட்சி குறித்து ஸ்டாலின் பொய் பிரசாரம் செய்து வருவதாக கண்டனம் தெரிவித்தார். இந்தியாவில் உள்ள மாநிலங்களில் அனைத்து மக்களுக்கும் நலத் திட்ட உதவிகள் தமிழகத்தில் வழங்கப்பட்டு வருவதை அவர் சுட்டிக் காட்டினார்.

பின்னர் மாவடி பகுதியில் அதிமுக வேட்பாளர் நாராயணனுக்கு ஆதரவு திரட்டிய முதலமைச்சர், குடிமராமத்து பணிகளை தமிழக அரசு சிறப்பாக மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். தடுப்பணைகள் கட்டும் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும், இதற்காக எத்தனை கோடி ரூபாய் தேவைப்பட்டாலும், அதை செலவு செய்ய தமிழக அரசு தயாராக இருப்பதாக குறிப்பிட்டார்.

சிங்கிகுளம் பகுதியில் அதிமுக வேட்பாளர் நாராயணனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சட்டம் ஒழுங்கை பேணி காத்து தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்வதாக கூறியுள்ளார். அதனால் தான் பிரதமர் மோடியும், சீன அதிபரும் சந்திப்பதற்கு தமிழகம் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், இதைவிட தமிழகத்தின் பாதுகாப்பிற்கு வேறு உதாரணம் தேவையில்லை என தெரிவித்துள்ளார்.

Exit mobile version