தமிழகத்தில் திடீரென பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி!

தென்காசியில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், இரவு நேரத்தில் திடீரென இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ததால், அந்த பகுதியில் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவியது. சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக பெய்த மழை காரணமாக சாலைகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது.

இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் பகுதியில், திடீரென பெய்த மழையால் வெப்பம் தணிந்தது. கடந்த 15 நாட்களாக வழக்கத்தை விட அதிகமான வெயில் சுட்டெரித்து வந்தது. சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையால், வெயில் தாக்கத்தால் அவதிப்பட்டு வந்த ஒசூர் பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்தது. இந்த நிலையில் திடீரென பெய்த சாரல் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான வானிலை நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Exit mobile version