கருணாநிதிக்கு கடலில் பேனா சின்னம் – தேசிய பசுமைத் தீர்ப்பாயம் விளக்கம் அளிக்கக் கோரி மத்திய, மாநில அரசுக்கு நோட்டீஸ்!

சென்னை மெரினா கடல் பகுதியில் திமுகவின் முன்னாள் தலைவர் கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு எதிராக வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மத்திய,மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என்று தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தவிட்டுள்ளது. திருச்செந்தூரைச் சேர்ந்த பி.ராம்குமார் ஆதித்தன் என்பவர், தேசிய பசுமைத் தீர்பாயத்தின் தென்மண்டல அமரில் கடந்த டிசம்பர் மாதம் தாக்கல் செய்த மனுவில் சில முக்கியத் தகவல்கள் உள்ளன. அதாவது, சென்னையில் கடல் ஆமைகள் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் இடமாக அறிவிக்கப்பட்டுள்ள நேப்பியர் பாலம் முதல் திருவான்மியூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் பின்புறம் வரை உள்ள பகுதியை எளிதில் சூழலியல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று அந்த மனுவில் உள்ளது.

மேலும் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவாக, மெரினா கடற்கரை அருகே கடல் பகுதியில், பேனா நினைவுச்சின்னம் அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்தத் திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. மத்திய அரசு கடற்கரை ஒழுங்குமுறை மண்டல மேலாண்மை விதிகளின் கீழ் இந்த திட்டத்திற்கு அனுமதி அளிக்க தடை வித்திக்க வேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது இந்த மனு கடந்த டிசம்பர் 16ஆம் தேதி தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. எதிர் மனுதாரர்கள் பதில் தாக்கல் செய்தபிறகு இந்த மனுவை ஏற்பது குறித்து முடிவெடுப்பதாகக் கூறி, விசாரனை தள்ளிவைக்கப்பட்டது.

தற்போது மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்ததையடுத்து, விரிவான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வு நடத்தப்பட்ட பின்னர், மத்திய சுற்றுச்சூழல் துறைக்கு ஆய்வறிக்கை அனுப்பப்படும். இதன் அடிப்படையில் மட்டுமே நினைவுச்சின்னம் அமைக்க அனுமதி வழங்கப்படும். எனவே, இந்த மனு விசாரணைக்கு ஏற்றதல்ல என்று அரசுத் தரப்பு வக்கீல் வாதிட்டார். மேலும் பொதுமக்கள் கருத்துகேட்புக் கூட்டத்தில் மனுதாரர் ஏன் பங்கேற்கவில்லை?, தனிமையில் அடைக்கப்பட்டாரா? என்ற கேள்விக்கு பாதுகாப்பு காரணங்களுக்காக கருத்துக்கேட்புக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று மனுதாரர் பதிலளித்தார்.

பின்னர்  அமர்வின் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில், ‘இதுவரை தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் பொதுப்பணித்துறையினர் மட்டுமே பதில் மனுத் தாக்கல் செய்துள்ள நிலையில், மத்திய மற்றும் மாநில அரசுத் துறைகளான சுற்றுச்சூழல் துறை, தமிழ்நாடு மீன்வளத்துறை, கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையம் உள்ளிட்ட மற்ர அரசுத் துறைகளும் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கின் விசாரணை மார்ச் மாதம் இரண்டாம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது’ என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version