ராகுல் காந்திக்கு பாட்னா நீதிமன்றம் ஜாமின் வழங்கியது

மக்களவை தேர்தலின் போது பிரதமர் மோடி குறித்து அவதூறு கருத்துக்களை வெளியிட்ட வழக்கில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பாட்னா நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது. மோடி என்ற குடும்ப பெயர் வைத்திருக்கும் அனைவரும் திருடர்களாக இருக்கிறார்கள் என தேர்தல் பிரசாரத்தில் ராகுல் காந்தி பேசியிருந்தார். ஐபிஎல் கிரிக்கெட் மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள லலித் மோடி, வங்கி மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நீரவ் மோடி உள்ளிட்டோரை மனதில் வைத்து மறைமுகமாக பிரதமர் மோடியை அவர் விமர்சித்திருந்தார்.

இதனை தொடர்ந்து பாட்னா முதன்மை நீதிமன்றத்தில் அம்மாநில துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி, ராகுல் மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்திருந்தார். இவ்வழக்கில் இன்று ராகுல் காந்தி நீதிமன்றத்தில் ஆஜரானார். அவரது சார்பில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது.இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.

Exit mobile version