பேட்ட திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வரலாம் – இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்

பேட்ட திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராக வாய்ப்புள்ளதாக இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்துள்ளார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, நவாஸுதின் சித்திக், த்ரிஷா, சிம்ரன் மற்றும் பலர் நடித்து கடந்த ஆண்டு வெளியான பேட்ட திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. அதனைத் தொடர்ந்து அப்படத்தின் இரண்டாம் பாகம் வந்தால் நன்றாக இருக்குமென ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதுதொடர்பாக சமீபத்தில் பேட்டியளித்த கார்த்திக் சுப்பராஜ், பேட்ட திரைப்படத்தை எடுக்கும் போது இரண்டாம் பாகம் எடுக்கும் எண்ணம் இல்லை என்றும் ஆனால் பேட்ட படம் மிகப்பெரிய வெற்றியடைந்த பிறகு இரண்டாம் பாகம் குறித்து ரசிகர்கள் பலரும் சமூகவலைதளங்களில் ஐடியா கொடுத்தது சுவாரஸ்யமாக இருந்தது என்றும் தெரிவித்தார். இப்போது வரை பேட்ட இரண்டாம் பாகத்திற்கான கதை தன்னிடம் இல்லை என்றும், ஆனால் எதிர்காலத்தில் கதை தயாராக வாய்ப்புள்ளதாகவும் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.

நடிகர் தனுஷ் நடிக்கும் ஜகமே தந்திரம் திரைப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வருகிறார். இவருடைய ஸ்டோன் பெஞ்ச் கிரியேஷன் தயரிப்பில் OTT தளத்தில் வெளியாகியிருக்கும் பென்குயின் திரைப்படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version