பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு!!

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களிலிருந்து தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளிலிருந்து பாசனத்திற்கு நீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறியுள்ளார். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, வரும் செப்டம்பர் 1 ம் தேதி முதல்15 ம் தேதி வரை 15 நாட்களுக்கு நாளொன்றுக்கு 1400 கனஅடி தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். வடக்கு மற்றும் தெற்கு கோடை மேலழகியான் கால்வாய், நதியுண்ணி கால்வாய், கன்னடியன் கால்வாய், மற்றும் கோடகன் கால்வாய்களின் கீழுள்ள 24 ஆயிரத்து 90 ஏக்கரில் நேரடி மற்றும் மறைமுகப் பாசனப் பரப்புகளில் பகுதியாக கார்பருவ சாகுபடியில் பயிரிடப்பட்ட பயிர்களை காக்கும் பொருட்டு சிறப்பு நிகழ்வாக வரும் செப்டம்பர் 16 ம் தேதி முதல் அக்டோபர் மாதம் 31 ம் தேதிவரை 46 நாட்களுக்கு நாளொன்றுக்கு 800 கனஅடி தண்ணீர் பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களில் இருந்து திறந்து விடுமாறு ஆணையிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம், திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, பாளையங்கோட்டை வட்டங்கள் மற்றும் தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம், ஏரல், மற்றும் திருசெந்தூர் வட்டங்கள் அடங்கிய கிராமங்களில் உள்ள பொது மக்களின், பாசனம் மற்றும் குடிநீர் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.  விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்வதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

 

 

 

Exit mobile version