தைப்பூசத்தை முன்னிட்டு பழனிக்கு பக்தர்கள் பாதயாத்திரை

பழனியில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக சென்று வருகின்றனர்.

பழனி முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா, கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தமிழகம் மட்டுமன்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். பாத யாத்திரையாகவும், காவடி எடுத்தும் வந்து தரிசனம் செய்கின்றனர். வேடசந்தூரை சேர்ந்த செல்வகணேஷ் என்ற பக்தர், உடலில் 1008 அலகுகள் குத்தி பறவைக் காவடியாக நேர்த்திக்கடன் செலுத்தினார்.இதனிடையே பழனி தைபூச விழாவின் முக்கிய நிகழ்வான முத்துக்குமாரசாமி வள்ளி தெய்வானை திருமணம் விமரிசையாக நடைபெற்றது.தொடர்ந்து முத்துக்குமாரசாமி-வள்ளி,தெய்வானை சமேதராக மணக்கோலத்தில் வெள்ளித்தேரில் ஏறி நான்கு ரதவீதிகளிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெள்ளத்தில் வலம் வந்துஅருள்பாலித்தார்.

தைப்பூசத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து பழனியில் குவிந்துள்ளனர். இதனிடையே இன்று நடைபெறும் தைப்பூசத்தை முன்னிட்டு பழனிக்கு தாராபுரம் வழியாக பல ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நடைபயணம் மேற்கொண்டுள்ளனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வழியாக பழனிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் அதிக அளவு செல்வதால் இந்த ஆண்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோவை – திருப்பூர் சாலை வழியாக ஆயிரக்கணக்கான மக்கள் நடந்து வருவதால் தாராபுரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Exit mobile version