2020 ஐபிஎல் போட்டியில் விளையாட இருக்கும் பெயிண்டரின் மகன்

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐ.பி.எல் போட்டியில் விளையாட, ஒசூரை சேர்ந்த பெயிண்டரின் மகன் 20 லட்சம் ரூபாய்க்கு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியால் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.

ஒசூரை சேர்ந்த பெயிண்டர் ராம்சிங் யாதவ் மகனான சஞ்சய் யாதவ், ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் விளையாட இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டு சன்ரைஸ் ஹைதராபாத் அணியால் 20 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். ஆல் ரவுண்டரான இவர், கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் 10 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டார். அதுமட்டுமின்றி, கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு பிரிமியர் லீக் தொடரில் திருவள்ளூர் வீரன்ஸ் அணிக்காக சஞ்சய் யாதவ் விளையாடியுள்ளார். அதேபோல் கடந்த 2017ஆம் ஆண்டில் நடைபெற்ற டி20 போட்டியில் தமிழ்நாடு அணியில் இடம்பெற்ற அவர், கேரள அணிக்கு எதிரான ஆட்டத்தில், முக்கிய கட்டத்தில் 11 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெறச் செய்தார். இதன் மூலம் இவருக்கு, ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாட தற்போது வாய்ப்பு தேடி வந்துள்ளது. ஐபிஎல் போட்டியில் பங்கேற்க உள்ள சஞ்சய் யாதவ்விற்கு வாழ்த்து தெரிவித்து அவரது பயிற்சியாளர் பிரேம் மற்றும் நண்பர்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.

Exit mobile version