தனியார் சொகுசு விடுதியில் 10க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஆய்வு

கொடைக்கானல் பூம்பாறையில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் 10க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பூம்பாறை பகுதியில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் நேற்று கேளிக்கை நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிலையில், கேளிக்கை விருந்தில், போதை வஸ்துகள் பயன்படுத்த கூடும் என்பதால், நிகழ்ச்சி நடத்த தடை விதிக்க கோரி கொடைக்கானல் காவல்துறை சார்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் மதுரை கிளை நிகழ்ச்சியை நடத்த தடை விதித்து உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவை அடுத்து, 10க்கும் மேற்பட்ட காவல்துறையினர், தனியார் சொகுசு விடுதிக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர். மேலும், தடையை மீறி நிகழ்ச்சி நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.

Exit mobile version