தமிழகத்தில் தொழில் தொடங்க முன்வர வேண்டும் – உலக முதலீட்டாளர்களுக்கு துணை முதலமைச்சர் அழைப்பு

தமிழகத்தில் தொழில் தொடங்க முதலீட்டார்கள் முன்வர வேண்டும் என, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்துள்ளார்.
உலக இஸ்லாமிய பொருளாதார மன்றம் மற்றும் ஐக்கிய பொருளாதார மன்றங்கள் சார்பில், சென்னை கிண்டியில் தொழில் மற்றும் முதலீடு குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது.

இதில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மலேசிய தொழில் நிறுவனங்களுடன் சிறந்த பொருளாதார உறவை தமிழகம் கடைபிடித்து வருவதாக தெரிவித்தார். தமிழகத்தில் தொழில் தொடங்க முன்வர வேண்டும் எனவும் முதலீட்டார்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்தார்.

கருத்தரங்கில் பேசிய தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், தமிழகம் தொழில்துறையில் சிறந்து விளங்குவதாக தெரிவித்தார். இந்தியாவில் தொழில்துறை சிறப்பாக செயல்படும் மாநிலங்களில், முதல் மூன்று இடங்களில் தமிழகம் ஒன்றாக உள்ளதாக குறிப்பிட்ட அவர், தொழில் தொடங்க முன்வரும் நிறுவனங்களுக்கு, அனைத்து உதவிகளையும் செய்ய அரசு தயாராக உள்ளதாக தெரிவித்தார்.

 

 

Exit mobile version