எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அரசியல் செய்வதற்காக விமர்சனம் செய்கிறார் – அமைச்சர் தங்கமணி

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் சட்ட மன்ற தொகுதியில், பரமத்தி ராகா ஆயில்ஸ் நிறுவனம் சார்பில்,10 ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரணப்பொருட்கள் வழங்கும் பணியை மின்துறை அமைச்சர் தங்கமணி தொடக்கி வைத்தார். பரமத்திவேலூர் சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட கூடச்சேரி ஊராட்சியில் பரமத்தி ராகா ஆயில்ஸ் நிறுவனம் சார்பில் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், ரவை உள்ளிட்ட நிவாரணத் தொகுப்பு, 10 ஆயிரம் குடும்பங்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட உள்ள நிலையில், முதற்கட்டமாக 100 குடும்பங்களுக்கு மின்துறை அமைச்சர் தங்கமணி நிவாரணப் பொருட்களை வழங்கி தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கமணி, தனியார் நிதி நிறுவனங்கள் கடன் வாங்கியவர்களை மிரட்டி தவணை கட்டுமாறு வலியுறுத்தினால் காவல்துறையினரிடம் புகார் தெரிவிக்கலாம் எனவும், தமிழக அரசு இதுபோன்ற புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறினார்.தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாவட்டம் தோறும் சென்று ஆய்வுப்பணிகள் மேற்கொண்டு வரும் நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அரசியல் செய்யவேண்டும் என்பதற்காக முதலமைச்சர் மீது விமர்சனம் செய்கிறார் எனவும் தெரிவித்தார்.

Exit mobile version