ஆந்திராவில் செம்மரம் கடத்தியதாக தமிழகத்தை சேர்ந்த ஒருவர் கைது

கடப்பா அருகே செம்மரம் வெட்டி கடத்தியதாக தமிழகத்தை சேர்ந்த ஒருவரை ஆந்திர போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் லங்கமல வனப்பகுதியில் செம்மரங்கள் வெட்டிக்கடத்துவதாக செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தபோது, டும்ப்பலகட்டு என்ற வனப்பகுதியில் 10-க்கும் மேற்பட்டோர் செம்மரங்களை வெட்டி காரில் கடத்த முயன்றனர்.

போலீசாரை கண்டதும் கடத்தல்காரர்கள் தப்பியோடிய நிலையில், திருப்பத்தூரை சேர்ந்த வேலாயுதம் என்பவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவரிடம் இருந்து 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்த போலீசார், தப்பியோடியவர்களை தீவிரமாக தேடிவருகின்றனர்.

இதற்கிடையே, செம்மரம் வெட்ட வந்ததாக கூறி தமிழர்கள் 32 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் மனித உரிமை ஆணையம் தலையிட்டு நீதி விசாரணை நடத்த வேண்டும் என, மக்கள் கண்காணிப்பகம் சார்பில் வழக்கறிஞர் ரவி வலியுறுத்தியுள்ளார்.

ஆந்திர மாநிலம் திருப்பதியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தைச் சேர்ந்த காமராஜ் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் ஆந்திர மாநில அதிகாரிகள் மனித தன்மையை இழந்து செயல்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.

Exit mobile version