கொடி நாள் தினத்தையொட்டி தமிழக மக்கள் தாராளமாக நிதி வழங்க வேண்டும் : முதலமைச்சர் அறிக்கை

படை வீரர் கொடி நாளை முன்னிட்டு முப்படை வீரர்களின் நலனை காக்க வேண்டியது சமூகத்தின் கடமையாகும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். முப்படை வீரர்களின் தியாகத்தை பாராட்டும் விதமாக நாளை நாடு முழுவதும் படை வீரர் கொடி நாள் கொண்டாடப்படவுள்ளது.

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நாட்டின் எல்லைகளை பாதுகாக்கும் பணியில் உயிரை துச்சமாக மதித்து நாட்டிற்காக பாடுபடும் முப்படை வீரர்களின் நலனை காக்க வேண்டியது சமூகத்தின் கடமையாகும் என தெரிவித்துள்ளார்.

வீரர்களின் நலனுக்காகவும், அவர்களின் குடும்ப பொருளாதார மேம்பாட்டிற்காகவும் வேண்டி தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை சிறப்பாக வழங்கி வருவதாவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். போரின் போது உயிரிழந்த வீரர்களின் வாரிசுகளுக்கு கருணைத் தொகை மற்றும் வேலை வாய்ப்பு வழங்குதல், பட்டப்படிப்பிற்கான கல்வி உதவித்தொகை வழங்குதல் என பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

கொடி விற்பனை மூலம் திரட்டப்படும் நிதி வீரர்களின் நலனுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ள முதலமைச்சர் பழனிசாமி, கொடி நாள் தினத்தையொட்டி தமிழக மக்கள் தாராளமாக நிதி வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

Exit mobile version