அயல்நாடுகளில் குடியேறிப் பணியாற்றுபவர்களில் இந்தியர்கள் முதலிடம்

அயல்நாடுகளில் சென்று குடியேறிப் பணியாற்றும் மக்கள் தொடர்பான புள்ளி விவரங்களை ஐநா சமீபத்தில் வெளியிட்டு உள்ளது. அயல்நாடுகள் சென்று குடியேறுவதில் உலகின் முதல் இடத்தைப் பெற்றுள்ள நாடாக இந்தியா உள்ளதாக இந்த விவரங்கள் கூறுகின்றன.

அமெரிக்காவின் நியூயார்க்கில் இயங்கும், ஐநாவின் பொருளாதாரம் மற்றும் சமூக விவகாரங்கள் துறையானது பல்வேறு நாடுகளுக்கும் சென்று குடியேறி பணியாற்றும் மக்களின் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டு உள்ளது. இந்தப் பட்டியலில் இந்தியா முதல் இடத்தைப் பெற்று உள்ளது.இவர்கள் வெளியிட்டு உள்ள தரவுகளின்படி, உலகெங்கும் உள்ள நாடுகளில் ஒரு கோடியே 75 லட்சம் இந்தியர்கள் குடியேறி பணியாற்றி வருகின்றனர். கடந்த 2015ஆம் ஆண்டில் ஒரு கோடியே 59 லட்சமாக இருந்த இந்த எண்ணிக்கை 4 ஆண்டுகளில் 10% அதிகரித்து உள்ளது. 

அதே நேரம் இந்தியாவிற்கு வந்து இங்கு குடியேறிப் பணியாற்றும் பிற நாட்டு மக்களின் எண்ணிக்கையானது, கடந்த 2015ஆம் ஆண்டில் இது 52 லட்சத்து 40 ஆயிரம் பேராக இருந்தது. ஆனால் தற்போது இது 51 லட்சத்து 50 ஆயிரம் பேராக வீழ்ச்சி கண்டு உள்ளது. இப்படியாக இந்தியாவில் வந்து குடியேறுபவர்களில் பெரும்பாலானவர்கள் வங்க தேசத்தைச் சேர்ந்த அகதிகள்.

பல்வேறு நாடுகளுக்கும் சென்று குடியேறி பணியாற்றும் மக்களின் தொகையில் இரண்டாம் இடத்தை மெக்ஸிகோ பெற்றுள்ளது. தற்போது ஒரு கோடியே 20 லட்சம் மெக்ஸிகோ மக்கள் அயல்நாடுகளில் வாழ்கின்றனர். மேலும், இந்தப் பட்டியலில் ஒரு கோடியே 10 லட்சம் மக்களுடன் சீனா மூன்றாம் மூன்றாம் இடத்திலும், ஒரு கோடிப் பேருடன் ரஷ்யா நான்காம் இடத்திலும், 80 லட்சம் மக்களுடன் சிரியா ஐந்தாம் இடத்திலும் உள்ளன. 

இப்படியாக மொத்தம் 27 கோடியே 20 லட்சம் மக்கள் தங்கள் நாடுகளை விட்டு பிறநாடுகளில் குடியேறிப் பணியாற்றுகின்றனர். இவர்களில் 6.4 சதவிகிதம் பேர் இந்தியர்கள் – என்கின்றது ஐநாவின் புள்ளிவிவரம்.இப்படியாகக் குடியேறும் மக்களின் பிரதான இலக்காக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உள்ளன. ஐநா கணக்கெடுப்பின் படி அமெரிக்காவில் 5 கோடியே 90 லட்சம் அயல்நாட்டினர் குடியேறிப் பணியாற்றி வருகின்றனர். ஐரோப்பிய நாடுகளில் மொத்தம் 8 கோடியே 20 லட்சம் மக்கள் குடியேறிப் பணியாற்றி வருகின்றனர். 

Exit mobile version