நாகரீகம் வளர்ந்த போதிலும் பழமையின் மீது ஆர்வம் கொண்ட மக்களை மசாலா பாலும், மண் குடுவையும் ஈர்க்கும் வடமாநில மசாலா பால் வியாபாரி…
நவீனத்தின் தாக்கம் என்னதான் மக்களை ஆட்கொண்டாலும், பழமையின் மீது ஈர்ப்பு இல்லாத மனிதர்கள் என்று சொல்ல, இங்கு யாரும் இல்லை என்பதே நிதர்சனமான உண்ணை. நம் வாழ்வின் ஒவ்வொரு நகர்விலும் ஏதோ ஒரு விதத்தில் பழமை நம்மை ஆட்கொண்டுள்ளது.
இன்றளவும் இளைஞர்கள் முதல் அணைவரும் மண்பாண்டங்களையும், பழங்கால உணவு வகைகளையும் அதிக அளவு விரும்புகின்றனர். அதை தன் ஆயுதமாக எடுத்துக்கொண்ட வடமாநிலத்தை சேர்ந்த சவுத்திரி, நேர்த்தியாக மசாலா பால் வழங்குவதிலும், மண் குடுவையால் பழமையின் மணத்தோடு வழங்கும் விதத்திலும் மதுரை மக்களை தன் வசம் ஈர்த்துள்ளார்.
மதுரை வடக்கு மாசி வீதியில் சிறிய கடை ஒன்று வைத்து, அதில் மசாலா பால் விற்பனை செய்து வரும் சவுத்திரி, பல அடுக்குமாடி கட்டிடங்களுக்கு சொந்தக்காரர். எளிமையின் முழு உருவமாக உள்ள அவர், தனது தொழில் மீது அதீத ஈடுபாடு வைத்துள்ளார்.
மாலை நேரங்களில் அவர் கண்களை கட்டிக்கொண்டு மசாலா பால் ஆற்றும் விதத்தை பார்ப்பதற்காகவே அங்கு கூட்டம் கூடுகிறது. மசாலா பாலை பிளாஸ்டிக் குடுவைகளில் வழங்காமல், பழங்கால மண் குடுவைகளில் தன் வாடிக்கயாளர்களுக்கு வழங்குகிறார். அவரின் திறமை உலக சாதனை போட்டி வரை சென்று வந்தாலும், அந்த பெருமையை மதுரை மக்களுக்காக அர்ப்பணிக்கிறார் வடமாநில தொழில் மேதை சவுத்திரி.