வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவு

தமிழகத்தின் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது.

தமிழகத்தில் புதிதாகப் பிரிக்கப்பட்ட விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல், அடுத்த மாதம் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த 15ஆம் தேதி தொடங்கியது. மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், கிராமப் பஞ்சாயத்துத் தலைவர் பதவிகளுக்கு பலரும் ஆர்வத்துடன் வேட்புமனுத் தாக்கல் செய்து வருகின்றனர். வேட்புமனு தாக்கல் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளதாலும், வேட்புமனுத் தாக்கல் இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைய உள்ளதாலும் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சைகள் வேட்பு மனுத் தாக்கல் செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர். வேட்புமனுத் தாக்கல் முடிவடைந்ததும், நாளை, மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். வேட்புமனுக்களை 25ம் தேதி திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். அன்று மாலை சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். 

Exit mobile version