சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவோர் மீது கருணை காட்ட முடியாது : உயர் நீதிமன்றம்

சமூக வலைதளங்களில் ஆபாசமாகவும், அவதூறாகவும் கருத்துக்களை பதிவு செய்பவர்களை கண்டுபிடிக்க 2 மாதத்திற்குள் சிறப்பு பிரிவை அமைக்க வேண்டும் என தமிழக டிஜிபி-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த மருதாசலம் என்பவர் நீதிபதி ஒருவருக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் ஆபாசமாக சில கருத்துகளை பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக அவரை காவல்துறையினர் கைது செய்தனர். ஜாமீன் கேட்டு மருதாசலம் தொடர்ந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன்பு ஏற்கனவே விசாரணைக்கு வந்தது. அப்போது சமூக வலைதளங்களில் ஆபாச பதிவின் மூலம் அவதூறாக கருத்து தெரிவிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி, சமூக வலைதளத்தில் அவதூறு கருத்துகள் பரப்புவோர்
இரும்பு கரம் கொண்டு ஒடுக்காவிட்டால் தனி நபர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றார். அவதூறு பரப்புவோர் மீது கருணை காட்ட
முடியாது என்று தெரிவித்த நீதிபதி, சமூக வலைதளங்களில் ஆபாசமாகவும், அவதூறாகவும் கருத்துகளை பதிவு செய்பவர்களை கண்டறிய மாவட்ட மற்றும் மாநில அளவில் அனைத்து காவல் நிலையங்களிலும் 2  மாதத்திற்குள் சிறப்பு பிரிவை அமைக்க வேண்டும் என தமிழக டிஜிபி-க்கு உத்தரவிட்டார். தன்னுடைய பதிவுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியதால் மருதாசலத்துக்கு முன் ஜாமின் வழங்கியும் நீதிபதி உத்தரவிட்டார்.

Exit mobile version