உயர்வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக எந்த முடிவும் எட்டப்படவில்லை – தமிழக அரசு!

பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை என தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு சொத்து மற்றும் வருமானச் சான்றிதழ் வழங்குவதை நிறுத்தி வைக்குமாறு தமிழக அரசு மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது. தமிழக அரசின் இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி பிராமணர் சங்கங்கள் சார்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, சான்றிதழ்கள் வழங்க வேண்டாம் என்ற உத்தரவை திரும்பப் பெற்று உள்ளதாகவும், இந்த சான்றிதழ்கள் மத்திய அரசின் கல்வி நிறுவனங்களுக்கும், வேலை வாய்ப்புக்கும் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்தது. மேலும், பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனவும் தமிழக அரசு தெரிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுதாரர் தரப்பு, பிற மாநிலங்களிலும் சான்றிதழ்களை பயன்படுத்த அனுமதிக்கும் படி கோரிக்கை வைத்தது. இதற்கு பதிலளித்த தமிழக அரசு, சான்றிதழ்களை பிற மாநிலங்களில் பயன்படுத்துவது குறித்து அந்தந்த மாநிலங்கள் தான் முடிவு செய்ய முடியும் என விளக்கம் அளித்தது. தமிழக அரசின் விளக்கத்தை ஏற்றுக் கொண்ட உயர்நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது.

Exit mobile version