தெலங்கானாவில் ஒரு கொலையை மறைக்க 9 பேரை கொலை செய்த இளைஞர்!!!

தெலங்கானாவில், கள்ளக் காதலியை கொலை செய்த நபர், அந்த கொலையை மறைக்க, அந்த பெண்ணின் உறவினர்கள் உள்ளிட்ட 9 பேரை கிணற்றில் வீசி கொலை செய்த சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகாரை சேர்ந்த சஞ்சய் குமார் யாதவ் என்ற நபர், தெலங்கானா மாநிலம் வாராங்கல்லில் உள்ள சணல் ஆலையில் பணியாற்றி வந்தார். அதே ஆலையில் பணியாற்றி வந்த மேற்குவங்கத்தைச் சேர்ந்த ரஃபிகா என்ற பெண்ணுக்கும், சஞ்சய்க்கும் பழக்கம் ஏற்பட்ட நிலையில், ரஃபிகா தனது 3 குழந்தைகளை அழைத்துக் கொண்டு சஞ்சய்யுடன் சென்று வசித்து வந்தார். ஒரு முறை ரஃபிகாவின் மகளிடம் சஞ்சய் தவறாக நடந்து கொள்ள முயற்சித்துள்ளார். இதனை ரஃபிகா கண்டித்ததால் ஆத்திரமடைந்த சஞ்சய், அவரை கொலை செய்ய திட்டமிட்டதாக கூறப்படுகிறது. கடந்த மார்ச் 6 ஆம் தேதி மேற்குவங்கத்தில் உள்ள உறவினர்களிடம் அழைத்து செல்வதாக ரஃபிகாவை ரயிலில் அழைத்து சென்ற சஞ்சய், அவருக்கு மோரில் தூக்க மாத்திரை கொடுத்து, பின்னர் ரயிலில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்தார். பின்னர் பாதியிலேயே தெலங்கானா திரும்பிய சஞ்சய்யிடம், ரஃபிகாவை பற்றி அவரது உறவினர் மசூத் ஆலம் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்துள்ளார். இந்த நிலையில், சம்பவ நாளன்று 60 தூக்க மாத்திரைகளை மசூத் ஆலம் குடும்பத்தினர் உண்ணும் உணவில் சஞ்சய் கலந்துள்ளார். நள்ளிரவில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மசூத் ஆலம், அவரது மனைவி நிஷா மற்றும் அவரது குழந்தைகள் மற்றும் சக பணியாளர்கள் என 9 பேரையும் ஒருவர் பின் ஒருவராக சாக்கு மூட்டையில் கட்டி, தூக்கிச் சென்று அருகில் உள்ள கிணற்றில் போட்டுள்ளார். சுமார் 3 மணி நேரத்திற்கு பிறகு ஆலையில் இருந்து சஞ்சய் வீடு திரும்பியுள்ளார். அதிகாலையில் சஞ்சய் வீடு திரும்பிய சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் சஞ்சயை கைது செய்த காவல்துறையினர், அவருக்கு 60 தூக்கமாத்திரைகள் எப்படி கிடைத்தது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே, ரஃபிகாவின் 3 குழந்தைகளும் மேற்குவங்கத்தில் உள்ள உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Exit mobile version