புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டமும், அதன் எல்லைகளும்

புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டத்தில் இடம்பெறும் எல்லைகள், வருவாய் கோட்டங்கள், தாலுகா விவரங்கள் பற்றி விபரம்

திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து பிரிந்து தமிழகத்தின் புதிய மாவட்டமாக தென்காசி உருவாக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், திருநெல்வேலி மாவட்டம் திருநெல்வேலி, தென்காசி என 2ஆக பிரிக்கப்பட்டது. அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தின் கீழ், திருநெல்வேலி மற்றும் சேரன்மகாதேவி ஆகிய 2 வருவாய்க் கோட்டங்கள் வருகின்றன. திருநெல்வேலி, பாளையங்கோட்டை, மானூர், நாங்குநேரி, சேரன்மகாதேவி, ராதாபுரம், அம்பாசமுத்திரம், திசையன்விளை ஆகிய 8 தாலுகாக்கள் திருநெல்வேலி மாவட்டத்தின் கீழ் செயல்படும் என அரசாணையில் அறிவிக்கப்பட்டது.

தென்காசி மாவட்டத்தின் கீழ் தென்காசி வருவாய்க் கோட்டமும், புதிதாக உருவாக்கப்படும் சங்கரன்கோவில் வருவாய்க் கோட்டமும் வருகின்றன. தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், சிவகிரி, வீரகேரளம்புதூர், சங்கரன்கோவில், திருவேங்கடம் மற்றும் ஆலங்குளம் ஆகிய தாலுகாக்கள் தென்காசி மாவட்டத்தின் கீழ் செயல்படும்.

இதேபோல், வேலூர் மாவட்டம் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை என மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம் வேலூர், குடியாத்தம் என 2 வருவாய்க் கோட்டங்களுடன் இனி செயல்படும். வேலூர், அணைக்கட்டு, காட்பாடி, குடியாத்தம், பேரணாம்பட்டு, கே.வி.குப்பம் ஆகிய 6 தாலுகாக்கள் வேலூர் மாவட்டத்தின் கீழ் வருகின்றன.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர், வாணியம்பாடி என 2 வருவாய்க் கோட்டங்களுடன் செயல்படும். திருப்பத்தூர், வாணியம்பாடி, நாற்றாம்பள்ளி, ஆம்பூர் ஆகிய 4 தாலுகாக்கள் திருப்பத்தூர் மாவட்டத்தின் கீழ் வருகின்றன.

ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை, அரக்கோணம் என 2 வருவாய்க் கோட்டங்களுடன் செயல்படும். வாலாஜா, ஆற்காடு, நெமிலி, அரக்கோணம் ஆகிய 4 தாலுகாக்கள் ராணிப்பேட்டை மாவட்டத்தின் கீழ் இனி செயல்படும்.

இதேபோல், காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு என 2ஆகப் பிரிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம், திருப்பெரும்புதூர் ஆகிய 2 வருவாய்க் கோட்டங்களுடன் இனி செயல்படும். காஞ்சிபுரம், உத்திரமேரூர், திருப்பெரும்புதூர், வாலாஜாபாத், குன்றத்தூர் ஆகிய 4 தாலுகாக்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தின் கீழ் வருகின்றன.

செங்கல்பட்டு, மதுராந்தகம், தாம்பரம் ஆகிய 3 வருவாய்க் கோட்டங்கள் செங்கல்பட்டு மாவட்டத்தில் கீழ் வருகின்றன. செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், தாம்பரம், பல்லாவரம், வண்டலூர் ஆகிய 8 தாலுகாக்கள் செங்கல்பட்டு மாவட்டத்தின் கீழ் வருகின்றன.

இதேபோல், விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம், கள்ளக்குறிச்சி என 2-ஆகப் பிரிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், திண்டிவனம் ஆகிய 2 வருவாய்க் கோட்டங்கள் உள்ளன. விழுப்புரம், விக்கிரவாண்டி, வானூர், திருவெண்ணெய்நல்லூர், திண்டிவனம், செஞ்சி, மேல்மலையனூர், மரக்காணம், கண்டாச்சிபுரம் ஆகிய 9 தாலுகாக்கள் விழுப்புரம் மாவட்டத்தின் கீழ் செயல்படும்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர் ஆகிய 2 வருவாய்க் கோட்டங்கள் உள்ளன. கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், சின்னசேலம், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, கல்வராயன் மலை ஆகிய 6 தாலுகாக்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் கீழ் செயல்படும் எனத் தமிழக அரசின் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version