சமூக வலைத்தளங்களுக்கு புதிய விதிகளை வகுத்த மத்திய அரசு

மத்திய அரசு விதித்துள்ள புதிய சட்ட விதிகள் குறித்து பதிலளிக்குமாறு ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

சமூக வலைத்தளங்களான வாட்ஸ் அப், ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களுக்கு கடந்த பிப்ரவரி 25ம் தேதி மத்திய அரசு புதிய விதிகளை வகுத்தது.

அதன்படி, பயனாளர்களின் புகார்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க தனித்தனி குறைதீர் அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்றும், சர்ச்சைக்குரிய தகவலை யார் முதலில் பகிர்ந்தார் என்ற தகவலை மத்திய அரசு கேட்கும்பட்சத்தில் பதிலளிக்க சமூக வலைத்தள நிறுவனங்கள் தயாராக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தன.

இதற்காக சமூக வலைத்தள நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட மூன்று மாத அவகாசம் நிறைவடைந்த நிலையில், கூகுள், பேஸ்புக் நிறுவனங்கள் மத்திய அரசின் நிபந்தனைகளை ஏற்று சேவையை தொடர்ந்து வருகின்றன.

ஆனால், மத்திய அரசின் சட்ட விதிகளை எதிர்த்து வாட்ஸ் அப் நிறுவனம், டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

அதில், புதிய விதிகளின்படி, ஒரு தகவலை முதலில் யார் பகிர்ந்தார் என்பதை கண்டறிவது கடினம் என்றும், தனியுரிமை தகவல் பாதுகாப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்றும் கூறியுள்ளது.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

இந்நிலையில், புதிய விதிகள் தொடர்பாக பதிலளிக்குமாறு மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் சமூக ஊடகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் தனி மனித உரிமையை மீறும் நோக்கம் இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது

Exit mobile version