காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் இன்று தேர்வு செய்யப்பட வாய்ப்பு

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் இன்று தேர்வு செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல் காந்தி மக்களவைத் தேர்தலில் பெற்ற தோல்விக்கு பொறுப்பேற்று, பதவியை ராஜினாமா செய்தார். காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில், அவரின் ராஜினாமா கடிதம் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும் இதுவரை ஏற்றுக் கொள்ளப்படவில்லை. புதிய தலைவரை, கட்சியின் செயற்குழு தான் தேர்வு செய்யும் என ராகுல் கூறிய போதிலும், அதற்கான பணிகள், இதுவரை துவங்காமல் இருந்தது.

இந்தநிலையில், டெல்லியில் உள்ள சோனியா காந்தியின் இல்லத்தில், அக்கட்சியின் முக்கிய தலைவர்கள், வெள்ளிக்கிழமை அன்று ஆலோசனை நடத்தினர். இதில் காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் ஏ.கே.அந்தோணி, அகமது படேல், கே.வி.வேணுகோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்தநிலையில், காங்கிரஸ் செயற்குழு கூட்டம் இன்று கூடுகிறது. எனவே புதிய தலைவர் இன்று தேர்வு செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

20 ஆண்டுகளுக்கு பின் நேரு குடும்பத்திலிருந்து அல்லாத ஒருவர், காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட உள்ளதால், யார் அவர்? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Exit mobile version