ஐரோப்பிய கூட்டமைப்புடன் புதிய பிரக்சிட் ஒப்பந்தம்- போரிஸ் ஜான்சன்

ஐரோப்பிய கூட்டமைப்புடன் புதிய பிரக்சிட் ஒப்பந்தம் எட்டப்பட்டதாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான, பிரக்சிட் ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கான காலக்கெடு வரும் 31ம் தேதியுடன் நிறைவடைகிறது. அதற்குள் ஒப்பந்தத்தை நிறைவேற்ற இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் உறுதி அளித்திருந்தார். இந்தநிலையில், பெல்ஜியம் தலைநகர் பிரசல்சில் ஐரோப்பிய கூட்டமைப்பு உச்சி மாநாடு தொடங்கி உள்ளது. இதில் ஐரோப்பிய கூட்டமைப்பை சேர்ந்த 28 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த மாநாட்டில் கலந்து கொள்ள பிரசல்ஸ் புறப்படும் முன்பு, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், இங்கிலாந்து – ஐரோப்பிய கூட்டமைப்பு குழுக்களுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தையில், புதிய பிரக்சிட் ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். இதை நிறைவேற்ற, இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற வேண்டும். இதற்காக இங்கிலாந்து சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தில் பிரக்சிட் ஒப்பந்தத்தை நிறைவேற்ற, உறுப்பினர்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என பிரதமர் போரிஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

Exit mobile version