நீட் தேர்வு ஆள்மாறாட்டம்: மாணவர் உதித் சூர்யாவுக்கு இரண்டு பேராசிரியர்கள் உதவியதாக புகார்

நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் மாணவர் உதித் சூர்யாவுக்கு இரண்டு பேராசிரியர்கள் உதவியதாக தேனி மருத்துவ கல்லூரி முதல்வர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.

நீட் தேர்வில் ஆள்மாறாட்ட விவகாரத்தில் கைதான சென்னை தண்டையார் பேட்டையை சேர்ந்த உதித் சூர்யா மற்றும் அவரது தந்தை டாக்டர் வெங்கடேசன் ஆகியோரிடத்தில் நடத்தப்பட்ட சிபிசிஐடி விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையை தொடர்ந்து பிரவீன், ராகுல், அபிராமி ஆகிய மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். இதைத்தொடர்ந்து, மாணவர்களிடமும் அவர்களின் தந்தையிடமும் சிபிசிஐடி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மாணவர் உதித் சூர்யாவுக்கு உதவியதாக பேராசிரியர்கள் வேல்முருகன் மற்றும் திருவேங்கடம் ஆகியோர் மீது தேனி மருத்துவ கல்லூரி முதல்வர் புகார் அளித்துள்ளார். தான் உண்மையை வெளியில் கூறியதால் தனக்கும் தனது குடும்பத்திற்கும் தொடர்ந்து அச்சுறுத்தல் வருவதாக தெரிவித்துள்ள கல்லூரி முதல்வர் ராஜேந்திரன், உரிய பாதுகாப்பு கோரி காவல்நிலையத்தில் மனு அளித்துள்ளார்.

Exit mobile version