சென்னையில் அனைத்திந்திய சித்த மருத்துவ நிறுவனத்தை அமைக்கவேண்டும் – பிரதமருக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்

மத்திய அரசு திட்டமிட்டுள்ள தேசிய சித்த மருத்துவமனை மையத்தை, தமிழகத்தில் அமைக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில், சித்தா, ஆயுர்வேதா, யோகா, யுனானி, ஹோமியோபதி போன்ற இந்திய மருத்துவத்துக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருவது மகிழ்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். மத்திய அரசு திட்டமிட்டுள்ள தேசிய சித்த மருத்துவ மையத்தை நடப்பு நிதியாண்டிலேயே தமிழகத்தில் அமைக்க வேண்டும் என்றும், சித்த மருத்துவ முறை தோற்றுவிக்கப்பட்ட தமிழகத்தில் சித்த மருத்துவ மையத்தை அமைப்பது தான் பொருத்தமாக இருக்கும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

மேலும், சித்த மருத்துவமனை மையம் அமைக்க சென்னை அருகே நல்ல காற்று, சாலை மற்றும் ரயில் வசதிகளுடன் கூடிய இடம் இருப்பதாகவும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த வசதிகள் தொடர்பான அனைத்து தகவல்களும் மத்திய அரசிடம் ஒப்படைத்துள்ளதாகக் கூறியுள்ள முதலமைச்சர், தேசிய சித்த மருத்துவமனை மையத்தை தமிழகத்தில் அமைக்க வேண்டும் என்றும் அக்கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

Exit mobile version