நாகையில் 3 ஐம்பொன் சிலைகளை திருடிய மர்ம கும்பல்

நாகை அருகே சுப்ரமணியர் ஆலயத்தில் இருந்து ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள 3 ஐம்பொன் சிலைகளை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

நாகை மாவட்டம், சீர்காழி அருகே கொண்டல் கிராமத்தில் உள்ளது கீழ்பழனி என்றழைக்கப்படும் சுப்ரமணியர் கோவில். வழக்கம் போல் இன்று காலை பூஜை செய்வதற்காக கோவிலை திறக்க குருக்கள் வந்த போது, ஏற்கனவே கோயில் திறந்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

மேலும், அங்கிருந்த 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த முருகன், வள்ளி, தெய்வானை ஆகிய மூன்று ஐம்பொன் சிலைகளையும் மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Exit mobile version