முன்விரோதம் காரணமாக ஆட்டோ டிரைவரை கொலை செய்த மர்ம நபர்கள்

கொளத்தூரில் முன்விரோதம் காரணமாக ஆட்டோ டிரைவரை கூட்டாளிகளுடன் கொலை செய்த குற்றவாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

சென்னை கொளத்தூர் அடுத்த விநாயகபுரத்தில் வசித்து வந்தவர் அன்சர் பாஷா 31. ஆட்டோ டிரைவரான இவர் நேற்று நள்ளிரவு 11.30 மணிக்கு கொளத்தூர் ரெட்டேரி சந்திப்பு அருகே ஆட்டோவை நிறுத்தி விட்டு தனது தாயார் மேகபூப் மற்றும் அன்சர் பாஷாவின் கள்ளக்காதலியான லட்சுமியுடன் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர் ஆட்டோவில் இருந்த அன்சர் பாஷாவை கத்தியால் தாக்கியுள்ளனர். ஆட்டோவிலிருந்து இறங்கி தப்பி ஓடிய அன்சர் பாஷாவை விரட்டி சென்ற மர்ம நபர்கள் சாலையின் நடுவே மடக்கி முகத்தில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றனர். படுகாயமடைந்த அன்சர் பாஷா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து தகவலறிந்த துணை கமிஷனர் முத்துசாமி, உதவி கமிஷனர்கள் அகஸ்டின் ஜான்பால், ஜெயராமன் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் சண்முகவேலன், செந்தில்குமார், ரஜீஸ்பாபு,முருகன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில் கொல்லப்பட்ட அன்சர் பாஷாவுடன் ஆட்டோவில் பேசிக் கொண்டிருந்த அவரது கள்ளக்காதலி லட்சுமியின் மகன் பெரிய அஜித் 21 என்பவர் தனது
நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. மேலும் விசாரணையில் லட்சுமியுடன் உள்ள தொடர்பை கைவிடுமாறு கொலை செய்யப்பட்ட அன்சர் பாஷாவை லட்சுமி மகன் பெரிய அஜித் எச்சரித்துள்ளார். இதனால் இருவருக்கும் அடிக்கடி மோதல்
ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிய 2 வழக்குகள் ஏற்கனவே புழல் காவல்நிலையத்தில் விசாரணையில் உள்ளதாக தெரியவந்தது.

இந்நிலையில் நேற்று இரவு அஜித் தனது நண்பர்கள் 2 பேருடன் சேர்ந்து அன்சர் பாஷாவை கொலை செய்ததாக கூறப்படுகிறது. போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். கொல்லபட்ட அன்சர் பாஷாவுக்கு பர்வீன் என்ற மனைவியும், முகமது தயான் 8 வயது
என்ற மகனும் , முஷரத் 7 வயது மகளும் உள்ளனர். கருத்து வேறுபாட்டால் கடந்த 3 மூன்று வருடங்களுக்கு முன்பு பிரிந்து சென்ற இவர்கள் புளியந்தோப்பில் வசித்து வருகின்றனர்.

Exit mobile version