சொத்துப்பிரச்னை – தாய்மாமனையும், பத்து வயது மகளையும் கொடூரமாகக் கொன்ற இளைஞன்!

வேலூர் மாவட்டத்தில் சொத்துப் பிரச்னை காரணமாக ஏற்பட்ட வாக்குவாதத்தால், சொந்த தாய்மாமனையும், அவரது பத்து வயது மகளையும், இளைஞர் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்துள்ள சம்பவம், அப்பகுதியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகேயுள்ள ஒடுகத்தூர் ஜாத்தான் கொல்லை மலை கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னுசாமி. இவர் மனநலம் பாதிக்கப்பட்ட தனது மனைவி பாஞ்சாலை, மகன்கள் ராஜேந்திரன், ராஜேஷ், 10வயது மகள் தீபா ஆகியோருடன், அன்வர் பாஷா என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் வசித்து வந்துள்ளார். பொன்னுசாமியின் மகன்கள் இருவரும் அன்வர் பாஷாவின் இறைச்சிக் கடையிலும், பொன்னுசாமி விவசாய நிலத்திலும் வேலை பார்த்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று காலை பொன்னுசாமியும் அவரது 10 வயது நிரம்பிய மகளும் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளனர். இதனால் அப்பகுதியே பரபரப்பாகியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறை டிஐஜி காமினி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டார். சம்பவ இடத்தில் சிம்பா என்ற மோப்ப நாய் உதவியுடன் காவல்துறையினர் கொலையாளிகளை தேடி வந்தனர்.

இதனிடையே பாஞ்சாலை அளித்த தகவலின் பேரில், வரதலம்பட்டு பகுதியைச் சேர்ந்த பொன்னுசாமியின் தங்கை மகன் அண்ணாதுரை உள்ளிட்ட 5 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் அண்ணாதுரையின் தாயுடன் உடன் பிறந்தவர்கள் 4 பேர் இருப்பதாகவும், இதனால் ஜாத்தான் கொல்லை பகுதியில் இருக்கும் 3 ஏக்கர் நிலத்தை பாகப்பிரிவினை செய்வதில் பொன்னுசாமியுடன் வாக்குவாதம் ஏற்பட்டதும் தெரியவந்துள்ளது.

இதனால் மதுபோதையில் இருந்த அண்ணாதுரை, ஆத்திரத்தில் பொன்னுசாமியை கீழே தள்ளிவிட்டு, அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார், இதனை கண்ட பொன்னுசாமியின் மகள் தீபா கூச்சலிடவே, சிறுமி என்றும் பாராமல் அண்ணாதுரை அவரையும் வெட்டிக் கொலை செய்துள்ளார். சொத்துப் பிரச்சினை காரணமாக, தாய்மாமனையும், சிறுமியையும் அண்ணாதுரை கொலை செய்துள்ளது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது

Exit mobile version