சென்னை அணியை வீழ்த்திய மும்பை அணி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.

மும்பை வான்கடே மைதானத்தில், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான 15-வது லீக் போட்டி நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 170 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 59 ரன்கள் எடுத்தார். சென்னை அணியில் வெய்ன் பிராவோ, ரவீந்திர ஜடேஜா, இம்ரான் தாஹிர், தீபக் சாஹர், மோகித் சர்மா ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இந்நிலையில் எட்டக்கூடிய இலக்கை துரத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்த போது, வாட்சன் (5), ராயுடு (0), ரெய்னா (16) என ‘டாப்-ஆர்டர்’ பேட்ஸ்மேன்கள் சொதப்பலாக வெளியேறினர்.தொடர்ந்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி (12) வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார். இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சிக்கல் துவங்கியது. நம்பிக்கை அளித்த கேதர் ஜாதவ் (58) அரைசதம் அடித்து வெளியேற, சென்னை அணி தோல்வியை நோக்கி சென்றது. 

இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 133 ரன்கள் எடுத்து 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. 
Exit mobile version