விஜய் மல்லையாவின் சொத்துகளை வங்கிகள் பயன்படுத்திக் கொள்ள மும்பை நீதிமன்றம் அனுமதி

இந்திய வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு அதை திருப்பிச் செலுத்தாமல் தொழிலதிபர் மல்லையா இங்கிலாந்துக்கு தப்பி ஓடிவிட்டார். இங்கிலாந்து நாட்டில் தஞ்சம் அடைந்துள்ள அவரை, இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது.  

இதுதொடர்பான  வழக்கு விசாரணை லண்டன் நீதிமன்றத்தில் நடக்கிறது. இவ்வழக்கில் விஜய் மல்லையா ஜாமீனில் உள்ளார்.  அவரை தப்பியோடிய பொருளாதார குற்றவாளியாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 5-ம் தேதி பணமோசடி தடுப்பு சட்டத்திற்கான சிறப்பு நீதிமன்றம் அறிவித்தது. விஜய் மல்லையாவின் சொத்துகளை பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டது.

விஜய் மல்லையாவுக்கு கடன் வழங்கிய வங்கிகள்,   அவரது சொத்துகளைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தன.
 
இந்நிலையில், விஜய் மல்லையாவின் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளை வங்கிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என மும்பை நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.  எதிர் தரப்பினர் வரும் 18-ம் தேதிக்குள்    மேல்முறையீடு செய்யலாம் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Exit mobile version