அம்மாவின் தாய்வீட்டு சீதனங்கள் – சிறப்பு கட்டுரை

 

தமிழகத்தில் இதுவரை பிறந்த, இனி பிறக்கும் ஒவ்வொரு பெண்குழந்தையும் பயனடையும் வகையில் திட்டங்களை வகுத்தவர் அம்மா. அத்தகைய முன்னோடித் திட்டங்களில், சிறந்த 10 திட்டங்கள் இங்கே…

1. பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம்

1992-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்தின்படி ஒரு குடும்பத்தில் ஒரே ஒரு பெண் குழந்தை மட்டும் இருந்தால், அப்பெண் குழந்தையின் பெயரில் வங்கியில் 50,000 ரூபாய் வைப்புத் தொகையும், இரண்டுப் பெண் குழந்தைகள் இருந்தால் ஒவ்வொரு பெண் குழந்தை பெயரிலும் தலா 25,000 வைப்புத் ரூபாயும் இருப்பு வைக்கப்பட்டு, 20 ஆண்டுகள் கழித்து வட்டியுடன் அத்தொகை வழங்கப்படும். இத்திட்டத்தால் கிடைக்கும் தொகை, ஏழைப் பெண்களின் உயர்கல்வி, திருமணம் போன்ற எதிர்காலத் தேவைகளுக்கு உதவியது, லட்சக்கணக்கான பெண்கள் இத்திட்டத்தால் பயன்பெற்றனர்.

2. தொட்டில் குழந்தை திட்டம்

பெண் சிசுக்கொலைகளைத் தடுக்கும் வகையில், 1992-ம் ஆண்டில் அம்மா அவர்களால் தொட்டில் குழந்தை திட்டம் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம், பிறந்த பெண் குழந்தையை வளர்க்க முடியாத சூழலில் உள்ள பெற்றோர் அதை அரசின் பதுகாப்பில் ஒப்படைக்க வழிசெய்யப்படது, இத்திட்டத்தால், தமிழகத்தில் பெண் சிசுக்கொலையின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து உள்ளது.

3. சானிட்டரி நாப்கின் வழக்கும் திட்டம்

பெண்களுக்கு இலவச சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டம் அம்மா அவர்களால் 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி வைக்கப்பட்டது. இதன் மூலம் கிராமங்களில் உள்ள இளம் பெண்கள் முதல் சிறைச்சாலையில் இருக்கும் பெண் கைதிகள்வரை பலதரப்பட்ட பெண்களுக்கும் இலவச சானிட்டரி நாப்கின்கள் வழங்கப்படுகின்றன. உலக அளவில் சிறந்த முன்னுதாரணத் திட்டமாக இத்திட்டம் போற்றப்படுகிறது.

4. பெண்களுக்கான உடல் எடை பரிசோதனைத் திட்டம்

உடல் எடைக்கும் உடல் நலனுக்கும் இடையே உள்ள தொடர்பை மனதில் கொண்டு பெண்களுக்கான உடல் எடை பரிசோதனைத் திட்டம் அம்மா அவர்களால் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் ஒவ்வொரு ஊரிலும் உள்ள அரசு அங்கன்வாடி மையங்கள் மூலம் குழந்தைகள், வளர் இளம் பெண்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோரின் உடல் எடையை கண்காணிக்கப்பட்டு, எடை குறைந்த பெண்களுக்கு ஊட்டச்சத்து மாவு வழங்கப்பட்டு அவர்களின் நலம் காக்கப்படுகிறது.

5. மகளிர் சுய உதவிக்குழுத் திட்டம்

ஏழை, எளிய, நடுத்தரப் பெண்கள் சுயமாக முன்னேறி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்ள, அவர்கள் மகளிர் சுய உதவிக் குழுத்திட்டத்தின் மூலம் கடனுதவிப் பெற திட்டம் கொடுத்தார் அம்மா. இந்தத் திட்டம் இந்திய அளவில் அதிக பெண் சுயதொழில் முனைவோர் உள்ள மாநிலமாக தமிழகத்தை மாற்றியது.

6. அம்மா குழந்தைகள் நல பரிசுப் பெட்டகம்

அரசு மருத்துவமனைகளில் குழந்தை பெற்றுக்கொள்ளும் தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும் அரசின் பரிசாக, சோப்பு, பொம்மை, துண்டு, ஷாம்பூ, குழந்தைக்கான ஆடை உள்ளிட்ட 16 பொருட்கள் வழங்கும் ‘அம்மா குழந்தைகள் நல பரிசுப் பொட்டகம்’ என்ற புதிய திட்டம் 2015-ம் ஆண்டில் அம்மா அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது.

7. மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு நிதியுதவித் திட்டம்

இது தி.மு.க அரசால் கொண்டுவரப்பட்ட திட்டம் என்றாலும், இளநிலைப் பட்டம் அல்லது டிப்ளோமா படித்த ஏழைப் பெண்களுக்கு திருமண உதவித் தொகையாக ரூ.50 ஆயிரம் மற்றும் தாலிக்கு 4 கிராம் தங்கம், படித்த ஏழைப் பெண்களுக்கு திருமண உதவித் தொகையாக ரூ.25 ஆயிரம் மற்றும் தாலிக்கு 4 கிராம் தங்கம் என அதை உயர்த்தினார் அம்மா. 2016-ம் ஆண்டு 6-வது முறையாக முதல்வராகப் பொறுப்பேற்றபோது, இத்திட்டத்தில் வழங்கப்பட்ட உதவித் தொகையுடன், தாலிக்கு வழங்கும் தங்கத்தின் அளவை 8 கிராமாக உயர்த்தி வழங்கினார் ஜெயலலிதா. இத்திட்டத்தின்படி ஆண்டுக்கு பல ஆயிரம் பெண்கள் பயன்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

8. பாலூட்டும் தாய்மார்களுக்கான தனி அறைத் திட்டம்

கைக்குழந்தைகளுடன் பெண்கள் வெளியில் செல்வதே பெரும்பாடானது, அதிலும் பாலூட்டும் தாய்மார்கள் பயணங்களில், பொதுவெளிகளில் தங்கள் குழந்தைக்கு பசியாற்ற முடியாமல் தவிப்பார்கள், இதனைக் கருத்தில் கொண்டு அனைத்து பேருந்து நிலையங்கள் மற்றும் பொது இடங்களில், தாய்மார்கள் பாலூட்டுவதற்கு என பிரத்யேக தனியறைகளை அமைத்துக்கொடுத்தார் அம்மா.

9. அம்மா மகப்பேறு சஞ்சீவி திட்டம்!

மகப்பேறு மாதம் வரை கர்ப்பிணி பெண்ணுக்கு ஏற்ற மூலிகைகளைத் தருவதுதான் ’அம்மா மகப்பேறு சஞ்சீவி திட்டம்’ இதன் மூலம், மகப்பேறு காலத்தில் பெண்களின் ஆரோக்கியத்தை காக்க 11 வகை மூலிகை மருந்துகள் அடங்கியிருக்கும் மருத்துவக் குணமுள்ள மூலிகைகள் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

10. விருதுத் திட்டங்கள்

வீர, தீரச் செயல்களில் ஈடுபடும் பெண்களுக்கு 5 லட்சம் பரிசுத் தொகையுடன் கூடிய, ‘கல்பனா சாவ்லா’ விருது, சமூக சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு, மதநல்லிணக்கம், மொழித் தொண்டு, கலை, அறிவியல், பண்பாடு, கலாசாரம், பத்திரிகை, நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொண்டாற்றும் பெண்களுக்கு 1 லட்சம் தொகையோடு 8 கிராம் தங்கப் பதக்கமும் அடங்கிய அவ்வையார் விருது ஆகியவற்றையும் அறிவித்தார் அம்மா.

Exit mobile version