இறந்த மகனின் நினைவாக 63 நாட்களுக்கான தாய்ப்பாலை தானம் கொடுத்த தாய்

அமெரிக்காவில் இறந்த மகனின் நினைவாக தாய்ப்பாலை தானமாகக் கொடுத்த தாயின் செயல் அனைவரது மத்தியிலும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் விஸ்கொன்சின் மாகாணத்தை சேர்ந்தவர் சியரா ஸ்ட்ராங்பீல்ட். இவர் கர்ப்பமாக இருந்த 20வது வாரத்தில் மருத்துவரிடம் பரிசோதனைக்கு சென்ற போது தான், வயிற்றில் இருந்த குழந்தைக்குஅரிய வகை மரபணு நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் நோய் ஆகும். மேலும் குழந்தை பிறந்தாலும் நீண்ட நாள் வாழ முடியாது என்பதால் கருவை கலைக்க என மருத்துவர்கள் கூறியுள்ளனர். ஆனால் அதனை ஏற்க மறுத்த சியரா குறித்த நாட்களுக்கு முன்பாக குறைபிரசத்தில் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். உடனடியாக பிறந்த குழந்தைக்கு ‘சாமுவேல் லீ’ என பெயரிட்டார். துரதிஷ்டவசமாக குழந்தை பிறந்த 3 மணி நேரத்திலேயே இறந்துவிட்டது. இதனால் மன உளைச்சல் பாதிப்புக்குள்ளான தாய் சயிரா தன் குழந்தை நினைவாக யாரும் எதிர்பாராத முடிவை எடுத்தார்.

இதுகுறித்து சயிரா தனது ஃபேஸ்புக் பக்கத்தில், “ என் குழந்தையைத்தான் என்னால் காப்பாற்ற முடியவில்லை. பால் இல்லாமல் அவதிப்படும் மற்ற குழந்தைகளையாவது காப்பாற்ற வேண்டும்” என்பதால் இத்தகைய முடிவை எடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். என்னுடைய இந்த முடிவால் என் மகன் கண்டிப்பாக பெருமை கொள்வான் என்று பதிவிட்டுள்ளார்.

குறித்த தேதிக்கு முன்னதாக, அதாவது 63 நாட்களுக்கு முன்பே ‘சாமுவேல் லீ’ பிறந்ததால் அதன் நினைவாக 63 நாட்களுக்கு தேவையான தாய்ப்பாலை வழங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார். சியராவின் இந்த செயலுக்கு உலகம் முழுவதும் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது,

Exit mobile version