காங்கோவில் எபோலா வைரஸால் 200 -க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

ஆப்பிரிக்க நாடான காங்கோவில் எபோலா வைரஸ் நோய் தீவிரமாக பரவி வருகிறது. இந்த நோயினால் அங்கு 200-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

காங்கோவின் கிழக்கு பகுதியில் 298 பேருக்கு கடும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அதில் 263 பேருக்கு எபோலா வைரஸ் தாக்கி இருப்பது உறுதி செய்யப்பட்டது. 35 பேருக்கு சந்தேகத்தின் அடிப்படையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த நோய் தாக்கியவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் வடக்கு கிவு பிராந்தியத்தில் உள்ள பேனி நகரை சேர்ந்தவர்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

எபோலா வைரஸ் தாக்கி வரும் நிலையில், சிகிச்சை அளிக்கிற மருத்துவ குழுவினருக்கு, ஆயுதம் ஏந்திய கிளர்ச்சியாளர்கள் தொல்லைகள் கொடுத்து வருவதாக அந்த நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

காங்கோ நாட்டைப் பொறுத்தமட்டில், எபோலா வைரஸ் நோயை எதிர்த்து போராடுகிறபோது, பாதுகாப்பு பிரச்சனை பெரும் சவாலாக அமைந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் டெட்ரஸ் அதனாம் கேப்ரேயெசஸ் தெரிவித்துள்ளார்.

Exit mobile version