குழந்தைகளை வித்துட்டோம்! பணத்த எப்படி பிரிச்சுக்குறது??

நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே 3 பெண்களுக்குள் பணம் பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில், குழந்தைகள் விற்பனை விவகாரம் அம்பலமானது. குற்றம் சாட்டப்பட்ட பெண்களில் குழந்தைகளின் தாயும் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முக்கூடல் அருகே உள்ள மையிலபுரம் மேட்டு தெருவில், திருப்பூரைச் சேர்ந்த தேவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வியாகம்மாள் மேரி, மார்க்ரெட் தீபா ஆகியோருடன் தகராறு ஏற்பட்டுள்ளது.

பணம் பிரித்து கொள்வது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், குழந்தைகள் விற்பனை குறித்து தகவல்கள் கசிந்துள்ளது. இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டத்தை அடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அதில், கடந்த 6 மாதத்திற்கு முன்பு தேவி தனது 2 வயது பெண் குழந்தையை, மேரி மற்றும் தீபாவின் உதவியுடன் குழந்தையில்லா தம்பதிக்கு விற்பனை செய்ததை கண்டுபிடித்தனர்.

தற்போது தனது 2 மாத குழந்தையை விற்பனை செய்ய முயற்சி மேற்கொண்ட நிலையில், அதில் வரும் பணத்தை பிரித்து கொள்வது தொடர்பாக தேவி, மேரி, தீபாவுக்கு தகராறு ஏற்பட்டதும் தெரிய வந்தது.

இதையடுத்து விற்பனை செய்யப்பட்ட 2 வயது பெண் குழந்தையை போலீசார் மீட்டு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைத்தனர்.

மேலும் இதுகுறித்து குழந்தையின் தாய் உள்பட 8 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Exit mobile version