தமிழகத்தில் அடுத்த கட்ட அகழ்வாய்வு பணிகளுக்கு அமைச்சர் பாண்டியராஜன் கோரிக்கை

தமிழகத்தில் அடுத்த கட்ட அகழ்வாய்வு பணிகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என மத்திய அரசிடம், தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.

புதுடெல்லியில் உள்ள யுனஸ்கோ வளாகத்தில் மூன்றாவது சர்வதேச திருக்குறள் மாநாடு நடைபெற்றது. சுமார் 10 நாடுகளிலிருந்து 125 தமிழறிஞர்கள் இதில் கலந்து கொண்டனர். மாநாட்டை தமிழ்ப்பண்பாட்டுத்துறை அமைச்சர் பாண்டியராஜன் துவக்கி வைத்தார். பின்னர் மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் பிரஹலாத் சிங் பட்டேலை அவரது அலுவலகத்திற்கு சென்று சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் அடுத்த கட்ட அகழ்வாய்வு பணிக்காக கீழடி,ஆதிச்சநல்லூர் ,கொடுமணல், சிவகளை ஆகிய இடங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். மேலும் சென்னை அருங்காட்சியகத்தை உலகத் தரத்தில் மேம்படுத்த 52 கோடி ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Exit mobile version