கோவையில் புதிய குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவிப்பு

கோவை மாவட்டம் முழுவதும் வறட்சி காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வீடுகளுக்கான புதிய குடிநீர் இணைப்புகள் இன்று முதல் வழங்கப்படும் என உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி கலையரங்கத்தில், மாநகராட்சியில் பணியாற்றும் நிரந்தர துப்புரவு பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார்.

பின்னர் பேசிய அமைச்சர் வேலுமணி, மாவட்டம் முழுவதும் வறட்சி காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வீடுகளுக்கான புதிய குடிநீர் இணைப்பு, இன்று முதல் வழங்கப்படும் என தெரிவித்தார். இதற்கு ஆன்லைன் மூலமும், மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், பேரூராட்சி, ஊராட்சி அலுவலகங்களிலும் பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம் என கூறினார். குடிநீர் இணைப்புக்காக சாலையை சேதப்படுத்தினால் உரிமம் ரத்து செய்யப்படும் என அவர் குறிப்பிட்டார்.

Exit mobile version