அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் வெற்றி பெற்றதாக வரலாறு இல்லை: கடம்பூர் ராஜு

அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் வெற்றி பெற்றதாக வரலாறு இல்லை என அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற அரசு பொருட்காட்சி நிறைவு விழாவில் கலந்து கொண்ட தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, சிறந்த அரங்குகள் அமைத்த துறைகளுக்கு பரிசுகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுகவிலிருந்து பிரிந்து மாற்று சக்தியாக யாரும் நிலைத்ததாக வரலாறு இல்லை என்றும் தற்போது இந்தத் தேர்தல் மூலமாக அது நிரூபணமாகியுள்ளது என்றும் தெரிவித்தார்.

டி.டி.வி.தினகரன் கட்சியில் இணைய வந்தால் அது குறித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் முடிவெடுப்பார்கள் என்று கூறிய அவர், முதல்வர் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் 120 எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டனர் என்றார். மக்கள் ஆதரவுடன் இந்த ஆட்சி 2021 வரை தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.

Exit mobile version