ஸ்டாலின் சிறைக்கு செல்ல தயாராக இருக்க வேண்டும் – அமைச்சர் சி.வி.சண்முகம்

புரட்சித் தலைவரால் துவக்கப்பட்டு, புரட்சித்தலைவியால் வளர்க்கப்பட்ட கட்சி, எடப்பாடி பழனிசாமியால் கட்டிக்காக்கப்படுகிறது என, சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அதிமுக 47-வது ஆண்டு துவக்க விழாவில், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பங்கேற்றுப் பேசினார்.

அப்போது, 2 மாதத்தில் அதிமுக ஆட்சி கலைந்து விடும் என்று ஜோசியம் கூறிவர்களின் கருத்தை முறியடித்து, பல்வேறு சூழ்ச்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து 2 ஆண்டுகளாக சிறப்பாக ஆட்சி நடத்தப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், குண்டர்களை நம்பி கட்சி நடத்தவில்லை என்றும், கோடானகோடி தொண்டர்களின் ஆதரவுடன் அதிமுக ஆட்சியில் உள்ளது என்றும் பெருமிதம் தெரிவித்தார்.

சாதிக்பாஷா யார்? என்று கேள்வி எழுப்பியதோடு, அவரது மர்ம மரணத்திற்கு பதில் சொல்ல வேண்டும் எனவும் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.

அன்புமணி ராமதாஸ் எப்பொழுது திகார் சிறைக்கு செல்வார் என்பது தெரியவில்லை என்று கூறிய அவர், ஸ்டாலின் விரைவில் சிறைக்கு செல்ல தயாராக இருக்க வேண்டும் என்றார்.

இன்னும் எத்தனை சூழ்ச்சிகள் வந்தாலும், அத்தனையும் வென்று, பல ஆண்டுகளுக்கு அதிமுக ஆட்சி நீடிக்கும் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் நம்பிக்கை தெரிவித்தார்.

Exit mobile version