ஊழல் செய்ததற்காக திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டு, இன்று வாய்தாவுக்கு அலைந்து கொண்டிரும் ப.சிதம்பரத்தை, ஒரு பொருளாதார நிபுணர் என்று கூறுவது ஏற்புடையதல்ல என கிராம தொழில்கள் துறை அமைச்சர் பாஸ்கரன் கூறியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் மலம்பட்டி ஊராட்சியில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் பாஸ்கரன் கலந்து கொண்டு பேசுகையில், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான ப.சிதம்பரத்தை கடுமையாக சாடினார்.
35 ஆண்டுகாலம் சிவகங்கையின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தும், அவர் இந்தத் தொகுதிக்காக ஒன்றுமே செய்யவில்லை என்பதையும் அமைச்சர் சுட்டிக் காட்டினார். நிகழ்ச்சியில் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சந்திரன் உட்பட அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.