மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினம் : முதல்வர், துணை முதல்வர் மரியாதை

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 3-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்ட பலர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். 

கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி உடல்நலக் குறைவால் முதலமைச்சர் ஜெயலலிதா காலமானார். அவரது 3-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது இல்லத்தில், அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்ட மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அதனை தொடர்ந்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் அமைச்சர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வாலாஜா சாலையில் இருந்து மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு ஊர்வலமாக சென்றனர்.

பிறகு, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நினைவிடத்தில், முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் மலர் வளையம் வைத்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர். அவர்களை தொடர்ந்து அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் உட்பட ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கருப்பு உடை அணிந்து மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். அதன் பின் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் உறுதிமொழி ஏற்றனர்.

Exit mobile version